Monday 17 December 2012

நாட்டுநலப்பணித்திட்டம்- மாணவர் புத்தாக்கப் பயிற்சி(17.12.2012)


     
              நாட்டுநலப்பணித்திட்டத்தில் புதியதாக இணைந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி இன்று(17.12.2012) கல்லூரி கருத்தரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

     தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சிக்கு, வந்திருந்த சிறப்பு விருந்தினர் பேராசிரியர். திரு.B. குமரன் அவர்களை நா.ந.ப.தி.அலுவலர் முனைவர். மு.மூர்த்தி அவர்கள் வரவேற்றார்.

          இதில் சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
குருநானக் கல்லூரியின் முன்னாள்  நாட்டுநலப்பணித்திட்ட அலுவலரான திரு.B.குமரன் அவர்கள், நாட்டுநலப்பணித்திட்டம் என்றால் என்ன, இவ்வமைப்பு சமூகத்திற்கும், இன்றைய இளைஞர்களுக்கும் எவ்விதம் உதவுகின்றது என்பது குறித்தும் நா.ந.ப.திட்டத்தின் கொள்கைகள் குறித்தும் மாணவர்களுக்கு எளிமையாகவும் இனிமையாகவும் எடுத்துரைத்தார்.

          உணவு இடைவேளைக்குப் பிறகு நாட்டுநலப்பணித்திட்டத்தின் மூத்த மாணவர்களான தினேஷ்குமார், குபேரன், சந்தோஷ், மோனிகா ஆகியோர் தாம் நாட்டுநலப்பணித்திட்டத்திலிருந்து  கற்றதும் பெற்றதும்  என்ன என்பதை சிறந்த அனுபவப் பகிர்தலாக புதிய நா.ந.ப.திட்ட தொண்டர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

              கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக உருவாக்கப்பெற்ற வலைப்பக்கம்  http://gncnss.blogspot.in/  ஐ  கல்லூரியின் முதல்வர். திருமதி. மெர்லின் மொரைஸ் அவர்கள், குருநானக் கல்லூரி(சுழற்சி2) இயக்குநர்.   முனைவர். திரு. ஆபிரகாம் தேவகுமார் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்து மாணவர்களிடையே நாட்டுநலப்பணித்திட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார். குறிப்பாக இரத்ததானத்தில் நமது கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட தொண்டர்கள் உயிர் காக்கும் மருந்தாக சிறப்பாக செயல்படுவதை வெகுவாகப் பாராட்டி வாழ்த்தினார்.
              
                புதியதாக துவங்கப்பட்டுள்ள வலைப்பக்கமான http://gncnss.blogspot.in/  ஐ  மாணவர்கள் எவ்விதம் பயன்படுத்த வேண்டும். அதில் இணைக்கப்பட்டுள்ள இணையதள இரத்ததான கொடையாளர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முறைகள் எப்படி என்பது குறித்து நா.ந.ப.தி.அலுவலர்  மு.தியாகராஜ் அவர்கள் மாணவர்களிடையே விளக்கினார்.

        இவ்விழாவிற்கு வருகை புரிந்த மற்றொரு சிறப்பு விருந்தினரான  பேராசிரியர். முனைவர். ப. மகாலிங்கம் அவர்கள் நாட்டு நலப்பணித் தொண்டர்கள்  தங்களைச் சமூக வளர்ச்சிக்கு  எவ்விதம் அர்பணித்து கொள்ள வேண்டும் என்பதை தமக்கே உரிய இனிய பாணியில் விளக்கினார்.

 நாட்டு நலப்பணித் திட்டத்தின் புதிய மாணவர்கள், நாட்டுநலப்பணித்திட்டத்தின் உறுதிமொழியைப் பேராசிரியர். மு.தியாகராஜ்  வாசிக்க மீண்டும் கூறி உறுதிமொழி எடுத்தனர்.

          முனைவர்.மு.மூர்த்தி அவர்கள் நன்றியுரை கூறி நிறைவடைந்த இவ்விழாவினை நா.ந.ப.திட்ட அலுவலர்களான பேராசிரியை.P.சசிகலா மற்றும் பேராசிரியை. ஞானசங்கரி உள்ளிட்ட நா.ந.தி.அலுலவலர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழா முழுவதையும் மாணவி. சத்யா தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment